General18 June 2026

கடல்வழி முற்றுகையை விலக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் இலத்திரனியல் கையெழுத்திட்டன!

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோரால் இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டது என்றும், ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளதால், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுக்களும் திட்டமிட்டபடி சந்திக்கவிருந்த போதிலும், அங்கு நேரில் கையெழுத்திடும் அதிகாரப்பூர்வ நிகழ்வு எதுவும் நடைபெறாது என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சில போக்குவரத்து சலுகைகளை வழங்குவதற்கு ஈடாக, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை 30 நாட்களுக்குள் நீக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், தஹியே (Dahiyeh) பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த ஈரானின் அச்சுறுத்தல்களை அடுத்து, அவசரப் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த நடைமுறை முடுக்கிவிடப்பட்டது.

இதன் பலனாக, தற்போது அமெரிக்காவின் கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்பட்டு, ஈரானிய கப்பல்கள் எந்தவித தடங்கலும் இன்றி துறைமுகங்களுக்குள் வந்து செல்கின்றன.

ஈரானின் உள்நாட்டு நலன்களுக்கு இணையாக, லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஈரான் முக்கியத்துவம் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதலாவது பிரிவில் 'லெபனான்' என்ற பெயர் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளதுடன், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பக் கட்டத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே ஈரான் கவனம் செலுத்தியுள்ளதால், அணுசக்தி விவகாரம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அணுசக்தி திட்டம் மற்றும் தடைகளை நீக்குவது குறித்து மாத்திரம் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 60 நாட்கள் கால அவகாசம் இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் இக்காலப்பகுதியை நீடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் தற்காப்புத் திறன்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. "ஈரானின் ஏவுகணைகள் ஏவுவதற்கே தவிர, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அல்ல" என்று குறிப்பிட்டுள்ள செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், நாட்டின் பாதுகாப்பு சொத்துக்கள் குறித்து எந்தவொரு தரப்புடனும் விவாதிக்கப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes