General30 June 2026

பொசன் தினத்திற்கு 20 ரூபாய் தன்சலா? இது போதாது... எங்கள் சம்பளம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை! - மக்கள் ஆதங்கம்

எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பொதுமக்கள் தமது அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் இந்த விலை குறைப்பு முற்றிலும் போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

"கடந்த வெசாக் பண்டிகையின் போது எரிபொருளுக்கான விலையை அதிகரித்து, இந்த பொசன் பண்டிகைக்கு 20 ரூபாய் குறைத்து அரசாங்கம் 'தானம்' வழங்குகிறதா?, கடையில் ஒரு தேநீர் குடிக்கவோ அல்லது ஒரு மிட்டாய் வாங்கவோ கூட இந்த 20 ரூபாய் போதாது. குறைந்தது 100 ரூபாவாவது குறைத்திருக்க வேண்டும்."

"நாட்டில் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. ஆனால் மக்களுக்கான வேதனம்; இன்னும் அதிகரிக்கப்படவில்லை. 100 ரூபாய் விலையை ஏற்றிவிட்டு, 20 ரூபாய் குறைப்பதில் எந்த பயனும் இல்லை. அடுத்த மாதமேனும்  விலையை மேலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மக்கள் கூறியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த வாகன சாரதிகள்,

"எரிபொருள் விலை குறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த சிறிய தொகை எவ்விதத்திலும் பொருளாதார சுமையைக் குறைக்கப் போவதில்லை. பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்" என சுட்டிக்காட்டினர்.
Related recommendation
Hiru TV News | Programmes