General15 July 2026

மோசடியாளர்களிடமே வங்கிக் கணக்கை உறுதிப்படுத்திய அதிகாரிகள்! - நாடாளுமன்ற அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, தவறான தரப்பினரின் கைக்குச் சென்ற விவகாரத்தில், வங்கிக் கணக்குத் தகவல்கள் சந்தேகத்திற்குரியவை என இலங்கை மத்திய வங்கி எச்சரித்திருந்த போதிலும், அவற்றை மோசடியாளர்களிடமே அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொண்டமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை, அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், 'எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் அவுஸ்திரேலியா' (Export Finance Australia) நிறுவனத்துக்கு வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தும் போது இடம்பெற்ற இணையவழி தாக்குதல் மற்றும் மோசடி தொடர்பிலேயே இந்த அறிக்கை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பயனாளியிடம் பணம் செலுத்தப்படுவதை அவதானித்த இலங்கை மத்திய வங்கி, அந்த முகவரி 'எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் அவுஸ்திரேலியா' நிறுவனத்தின் முகவரியுடன் பொருந்தவில்லை என சுட்டிக்காட்டியிருந்தது.

நிதி மோசடி குறித்த சந்தேகங்களை எழுப்பி, உண்மையான கடன் வழங்குநரிடம் தகவல்களை மீள உறுதிப்படுத்துமாறும் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி நிதியமைச்சுக்கு மத்திய வங்கி அறிவித்திருந்தது.

மத்திய வங்கியின் எச்சரிக்கையைப் புறந்தள்ளி, உண்மையான கடன் வழங்குநரைத் தொடர்புகொள்வதற்குப் பதிலாக, மோசடியில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கே மின்னஞ்சல் அனுப்பி, அவர்களிடமே வங்கிக் கணக்கு விபரங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அபுதாபியில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக 'மிஷ் குளோபல்' (Mish Global LLC), 'எல்.எம்.எச் குளோபல்' (LMH Global LLC) மற்றும் 'சிஃப்ரா வதன்' (Sifra Watan Project Management Services) ஆகிய நிறுவனங்களுக்கு அரச கடன் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 'அவுஸ்திரேலிய ஏற்றுமதி கடன் முகவரகம்' (Australia’s export credit agency) எனக் கூறிக்கொண்டுள்ளன.

இவ்வாறான ஒரு போலி நிறுவனங்களுக்கு ஏன் பணம் செலுத்தப்படுகிறது என்பது குறித்து எவரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு (EXIM Bank) இலங்கை செலுத்தவிருந்த பணம் மோசடியானதாக இருக்கலாம் என 'ஜே.பி. மோர்கன்' (J.P. Morgan) நிறுவனத்தின் மோசடி தடுப்புப் பிரிவு எச்சரித்து, அந்தப் பரிவர்த்தனையை நிறுத்தியிருந்தது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மோசடியான டொமைன் பெயர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும், இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு பிரிவுக்கும் (CERT) முறைப்பாடளித்தது.

இருப்பினும், அதற்கு 11 நாட்களின் பின்னர், ஜனவரி 20 ஆம் திகதி 'மிஷ் குளோபல்' நிறுவனத்துக்கு மீண்டும் 997,799 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

'டிட்வா' (Dithwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட வளப் பற்றாக்குறையினால் கடன் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், பணம் ஏற்கனவே மோசடியாளர்களுக்குச் சென்றிருந்தாலும், அவுஸ்திரேலிய தரப்பிடம் மேலதிக கால அவகாசத்தைக் கோருவதற்கு எவரோ ஒருவர் முயற்சித்திருந்தமையும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes