International29 July 2026

தமிழக பல்கலைக்கழக நிகழ்வில் அவமதிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழா 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னரே மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

தமிழைத் தாயாகப் போற்றும் தமிழக மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது, இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

"வந்தே மாதரம் எனும் மதச்சார்புக் கொண்ட பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும்" என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்லேக்கர் அழுத்தத்தின் பேரில் இது நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும் கூட, அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கை பார்க்கும் தமிழக வெற்றிச் கழக அரசாங்கத்தின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்" என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

அத்துடன், "கொள்கை எதிரி என மேடையில் அறிவித்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாகத் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்" என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes