General01 August 2026

கடலில் விழுந்த 17 வெற்று கொள்கலன்கள் தெற்கு நோக்கி மிதக்கின்றன!

கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட நெட்டாங்கு 06° 54' மற்றும் கிழக்கு அகலாங்கு 079° 32' ஆகியவற்றுக்கு அருகிலுள்ள கடல் பகுதியிலேயே குறித்த கொள்கலன்கள் விழுந்துள்ளன.

நிலவும் காற்றோட்டம் மற்றும் நீரோட்டங்களின் திசைக் காரணமாக, இந்த கொள்கலன்கள் தற்போது சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை ஊடாக காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொழும்பிலிருந்து பேருவளை ஊடாக காலி வரையிலான தெற்கு கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மற்றும் பயண செய்யும் அனைத்துக் கடற்றொழில் படகுகளும் இது தொடர்பில் தீவிரக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

படகுகள் மீது இந்தக் கொள்கலன்கள் மோதுவதன் மூலம் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், கடலில் பயணிக்கும்போது கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மிதந்து செல்லும் இந்தக் கொள்கலன்கள் ஏதேனும் கண்களுக்கு புலப்பட்டால், அது குறித்து உடனடியாகக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலி தொடர்பு நிலையத்துக்கு அறிவிக்குமாறு அனைத்து கடற்றொழிலாளர்களிடமும் கோரப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes