General04 August 2026

கொங்கோவை உலுக்கும் எபோலா - தீவிரமடையும் பேரபாயம்!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஐக் கடந்துள்ளது.
 
மே 15 ஆம் திகதி இந்த நோய்த்தாக்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 3,802 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,707 பேர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் மிக வேகமாகப் பரவும் இந்த எபோலா பரவலுக்கு அரிய வகை 'புண்டிபுகியோ' வைரஸே காரணமாகும்.

இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லாத நிலையில், பரிசோதனை நிலையிலுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு இதுரி மாகாணத்திலேயே 90 சதவீதமான பாதிப்புகள் பதிவாகியுள்ள போதிலும், கிசாங்கனி நகரம் உட்பட மேலும் 5 மாகாணங்களுக்கும் தொற்று பரவியுள்ளது.

இதுவரை 100 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயுதக் குழுக்களின் வன்முறைகள், நிதியுதவிப் பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு நிலுவைகள் காரணமான சுகாதாரப் பணியாளர்களின் போராட்டங்கள் என்பன நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes