General04 August 2026

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!

மஹர சிறைச்சாலை சம்பவத்துக்கு வெளிப்புறத் தூண்டுதல் ஏதேனும் இருந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விரிவான விளக்கம் ஒன்றை முன்வைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கைதிகளுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏனைய சிறைச்சாலைகளின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நாளில் மஹர சிறைச்சாலையின் சமையலறை கட்டிடத்தின் கூரையில் முதலில் மூன்று கைதிகள் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறைச்சாலை அத்தியட்சகர் அவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.

இதன்பின்னர், மற்ற சிறைக்கூடங்களில் இருந்த சுமார் 16 கைதிகள் அங்கு ஒன்று திரண்டதுடன், பெரும் சத்தமிட்டு பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், சிறைச்சாலை அதிகாரிகள் பின்வாங்கி பிரதான நுழைவாயிலை மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes