International22 August 2026

போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!

பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய்கள் மற்றும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'எனலொக் பன்னீர்' (Analogue Paneer) எனும் செயற்கைப் பன்னீரை 'பன்னீர்' என்ற பெயரில் விற்பனை செய்ய இந்தியாவின் கர்நாடக மாநில அரசு ஓராண்டு காலத்துக்குத் தடை விதித்துள்ளது.

மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த செயற்கைப் பன்னீரைத் தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அசல் பன்னீர் என்பது பாலில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால், பாலில் உள்ள கொழுப்புக்கு பதிலாகத் தாவர எண்ணெய் அல்லது கொழுப்புகளைக் கலந்து தயாரிக்கப்படும் பொருட்கள் 'பன்னீர்' என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படக் கூடாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகள் செயற்கைப் பன்னீரைப் பயன்படுத்தவோ, சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes