General06 September 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை விஜயம் - திகதிகள் அறிவிப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றை அவர் வழிநடத்தவுள்ளார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த விஜயம் பெரிதும் உதவும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நீண்டகால நாகரிகத் தொடர்புகள், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான வலுவான உறவுகளின் அடிப்படையில் இலங்கை உடனான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் 2025 ஆம் ஆண்டு வீசிய டிட்வா சூறாவளியின்போது வழங்கப்பட்ட ஆதரவுகள் ஆகியவை இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கைக்குச் சிறந்த சான்றுகள் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes