Sports21 June 2026

முத்தரப்பு ஒருநாள் தொடரின் செம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்திய ஏ அணி!

சுற்றுலா இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான, முத்தரப்பு ஒருநாள் தொடரின் செம்பியன் பட்டத்தை இந்திய ஏ அணி வெற்றிக் கொண்டது.

தம்புள்ளை மைதானத்தில் இன்று இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 377 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வைபவ் சூரியவன்சி ஆரம்ப முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கமைய, 5 ஆறு ஓட்டங்களும் 5 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக வெறும் 11 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரராக சாதனை படைத்தார்.

அத்துடன், ஒட்டுமொத்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இருபதுக்கு இருபது போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் பெற்றிருந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

அதேநேரம் இந்தப் போட்டியில் 8 ஆறு ஓட்டங்களும் 10 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக வெறும் 29 ஓட்டங்களில் 94 ஓட்டங்களை பெற்று, சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 378 என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47 .1 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கெட்களை இழந்து 311 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்படி, ஒரு நாள் முத்தரப்பு தொடரின் செம்பியன் பட்டத்தை இந்திய ஏ அணி தம்வசப்படுத்தியது.

இதேவேளை, இன்றைய போட்டியின் சிறப்பாட்ட வீரராக வைபவ் சூரியவன்சி தெரிவு செய்யப்பட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes