General20 September 2025

கையெழுத்து வேட்டை மூலம் மலையக அதிகார சபையை காப்பாற்றப் போராட்டம் – முன்னாள் எம்.பி திலகர்

மலையக அபிவிருத்தி அதிகார சபை கலைக்கப்படக்கூடாது என்பதனை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், மலையக அதிகாரசபை கலைக்கப்படாது என அரசாங்கம் வாய்மொழி உறுதி அளித்தாலும், எழுத்து மூல உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இந்த அதிகாரசபைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதன் ஊடாக அது, கலைக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம். மலையக அதிகார சபையானது, அரசாங்கத்தின் கலைக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் மறுசீரமைப்பின் பெயரில் அதிகாரக் குறைப்பு செய்யப்படக்கூடாது என்றும், சமூக நலனுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படும் எனவும், கையொப்பமிட்ட மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்கள் வழியாக மனுவின் மாதிரி வெளியிடப்பட்டு கையெழுத்து சேகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்
Related Recomands
Hiru TV News | Programmes