General25 October 2025

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும். 
 
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் மேற்கு திசையில் நகர்ந்து தாழமுக்கமாக வலுவடைந்து, மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 900 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. 
 
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர கூடிய சாத்தியம் காணப்படுவதனால், நாளைய தினம் ஆழமான தாழமுக்கதாமாக வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அத்துடன், நாளை மறுதினம் மேல் மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தநிலையில் காங்கேசன்துறையில் இருந்த திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான, கடற்பரப்புகளில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
அத்துடன், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டமான நிலை காணப்படுவதுடன், கடும் குளிரான வானிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன், பனிமூட்டமான வானிலை நிலவுவதால், குறித்த நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes