General17 December 2025

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான துருக்கி விமானம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணம்

கொழும்பிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி எயார்லைன்ஸ் விமானம், தரையிறங்கும் சக்கர அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பிய நிலையில், பழுதுபார்ப்புப் பணிகள் முடிக்கப்பட்டு இன்று மாலை மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 
 
துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TK 733 ரக விமானம், நேற்று இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
 
எனினும், புறப்பட்ட சில நேரத்திலேயே அதன் தரையிறங்கும் சக்கர அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். 
 
விமானியின் அறிவிப்பைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கத்திற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 
 
தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசர கால மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். 
 
தரையிறங்கும் போது ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்காக, விமானம் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது அதிலிருந்த மேலதிக எரிபொருளை வெளியேற்றியது. 
 
202 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் பயணித்த இந்த விமானம், இறுதியில் எவ்வித பாதிப்புமின்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 
 
விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். 
 
விமானத்தைப் பழுதுபார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில், இந்தச் சம்பவத்தினால் சில வெளிச்செல்லும் விமானங்கள் தாமதங்களை எதிர்கொண்டன. 
 
பழுதுபார்ப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த விமானம் இன்று மாலை 5.41 அளவில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes