General26 January 2026

எதிர்க்கட்சி தேவையற்ற பீதியை ஏற்படுத்துகிறது - பிமல் ரத்நாயக்க

நாட்டில் வேண்டுமென்றே அமைதியின்மையை உருவாக்கி, புதிய கல்விச் மறுசீரமைப்பை சீர்குலைக்க எதிர்க்கட்சியும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவும் முயற்சிப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், எதிர்க்கட்சியின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகளே புதிய கல்வி மறுசீரமைப்புகளின் சில அம்சங்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் தவறான கூற்றுகளால் பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இது மறுசீரமைப்பு செயல்முறையின் மீது பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.

மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தும் எந்தவொரு நிலையிலும் சில குறைபாடுகள் இருப்பது இயல்பானது, ஆனால் அத்தகைய ஒவ்வொரு விடயத்தையும் மறுசீரமைப்பின் தோல்வியாக எதிர்க்கட்சி சித்திரிக்கிறது என தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட மாட்டாது என்பதைத் தெளிவுபடுத்திய அமைச்சர்,முன்மொழியப்பட்ட ஐந்து அளவுகோல்களில் நான்கரை அளவுகோல்கள் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

தரம் ஆறு ஆங்கில பாடநெறி (Module) தொடர்பான ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாகவே மிகக் குறைந்தளவிலான தாமதம் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக எந்தவித நற்பெயரும் இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை,கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அதற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தரம் 6 க்கான சீர்திருத்தங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தோல்விக்கு எதிர்க்கட்சியே காரணம் என அரசாங்கம் பழிசுமத்துவதை வன்மையாகக் கண்டித்தார்.

தற்போதைய அரசாங்கமே இந்தச் சீர்திருத்தங்களைத் தன்னிச்சையாக நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், கல்வித் துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு நடப்பாண்டிலேயே முறையான சீர்திருத்தங்களை விரைவாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes