General09 February 2026

லிபியக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து : 53 பேர் மாயம்

லிபியக் கடற்கரையில் டஜன் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு கவிழ்ந்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 53 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 6 அன்று வடமேற்கு லிபியாவின் சுவாரா நகருக்கு வடக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

படகில் மொத்தம் 55 பேர் இருந்துள்ளனர். இவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பெப்ரவரி 5 ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஜாவியா பகுதியிலிருந்து புறப்பட்ட இப்படகு, சுமார் ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கடலில் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் இரண்டு பேர் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.

சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் தரவுகளின்படி, இந்தப் பாதை உலகின் மிகவும் ஆபத்தான ஒன்றாகத் தொடர்கிறது.

இப்பாதையில் 2025 ஆம் ஆண்டு (முழுவதும்) 1,300க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். 2026 ஜனவரி மட்டும் குறைந்தது 375 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மோசமான வானிலை காரணமாக மத்திய தரைக்கடல் பகுதியில் பதிவாகாத பல 'மறைமுக' கப்பல் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான இறப்புகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்," என சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் எதிர்கொள்ளும் இந்தத் தொடர்ச்சியான உயிரிழப்புகள், இப்பாதையில் உள்ள தீவிரமான அபாயங்களை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes