General04 June 2026

ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!

குவைட் சர்வதேச வானூர் நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கோளாறால் ஏற்பட்டது என்ற ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளைகம் (U.S. Central Command) முற்றாக நிராகரித்துள்ளதுடன், அது 'முற்றிலும் பொய்' என்றும் தெரிவித்துள்ளது.

குவைட் சர்வதேச வானூர்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவக் காவல்படை (IRGC) உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தது.

குவைட்டின் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் தயாரிப்பான 'பேட்ரியட்' (Patriot) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதிலிருந்து தவறுதலாகப் பாய்ந்த ஏவுகணையாலேயே இந்தச் சேதம் சம்பவித்துள்ளது என ஈரானிய இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

ஈரான் திட்டமிட்டு, எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயணிகள் வானூர்தி நிலையத்தின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்பதே உண்மை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த தாக்குதலுக்கு ஈரானே முழுப்பொறுப்பு என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ மற்றும் தந்திரோபாய பதற்றம் மேலும் உச்சமடைந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes