General04 June 2026

பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகளவில் பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 86.6 கோடி பேர் நோய்வாய்ப்படுவதுடன், 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வெறும் 9 சதவீதம் மட்டுமே உள்ள போதிலும், உணவினால் ஏற்படும் ஒட்டுமொத்த நோய் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பகுதியை (33%) இந்த குழந்தைகளே எதிர்கொள்கின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு மரணத்தை விளைவிப்பதுடன், உணவில் கலந்திருக்கும் ஆசனிக், ஈயம் போன்ற இரசாயன நச்சுகள் அவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதித்து ஆயுட்கால நரம்பியல் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.

பிராந்திய ரீதியாக ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இந்த பாதிப்புகள் மிக உயர்வாகப் பதிவாகியுள்ளன.

உணவு நச்சுத்தன்மையால் ஏற்படும் மரணங்களில் 73 சதவீதத்துக்கு பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற உயிரியல் காரணிகளை விட இரசாயன நச்சுகளே முக்கிய காரணமாக அமைகின்றன.

குறிப்பாக, உணவில் கலக்கும் கனிம ஆசனிக் 42 சதவீத மரணங்களுக்கும், ஈயம் (Lead) 31 சதவீத மரணங்களுக்கும் காரணமாக அமைவதுடன், இவை மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் தூண்டுகின்றன.

ஆரோக்கியப் பாதிப்புகளுக்கு அப்பால், இந்த நோய்த்தாக்கங்களால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் போவதால் உலகளாவிய உற்பத்தித்திறனில் ஆண்டுக்கு சுமார் 310 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சுத்தமான குடிநீர், முறையான சுகாதாரம் மற்றும் உணவை பாதுகாப்பாகக் கையாளுதல் போன்ற எளிய நடைமுறைகள் மூலம் இந்த பெரும் மனித உயிரிழப்புகளையும் நோய்களையும் தடுக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes