International04 June 2026

பொண்டாய் கடற்கரையில் 15 பேரின் உயிரை காப்பாற்றியவர் மீது, தந்தையை தாக்கியதாக குற்றச்சாட்டு!

அவுஸ்திரேலியாவின் பொண்டாய் கடற்கரையில் கடந்த டிசம்பர் மாதம் யூதர்களின் நிகழ்வொன்றில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் போது, தாக்குதல்தாரிகளில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து மக்களைக் காப்பாற்றிய அஹ்மத் அல் அஹ்மத் என்ற நபர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்த தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

குறித்த நேரத்தில், தனது உயிரைப் பணயம் வைத்துத் தாக்குதல்தாரியை நிராயுதபாணியாக்கியதன் மூலம் அஹ்மத் உலகளவில் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், 44 வயதான அஹ்மத் அல் அஹ்மத், கடந்த மார்ச் மாதம் தனது தந்தையைத் தாக்கியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, அவருக்கு எதிராகக் குடும்ப வன்முறை சார்ந்த பொதுத் தாக்குதல், பின்தொடர்ந்து அச்சுறுத்துதல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அஹ்மத், இவை அனைத்தும் "முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை" என அந்த நாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தந்தை மீதான தாக்குதல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அஹ்மத் அல் அஹ்மத் எதிர்வரும் 29 ஆம் திகதி சிட்னியின் பேங்க்ஸ்டவுன் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes