General04 June 2026

கோப்பி பயிர்ச்செய்கைக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க பயிராகக் கருதப்படும் கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தச் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கோப்பி பயிர்ச்செய்கையின் போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பரிந்துரைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் கோப்பி பயிர்ச்செய்கைகளுக்கு மட்டுமே இந்த புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பிக் கன்றுகள் நடப்பட்டதில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கான காப்புறுதித் தொகையானது, அந்தந்த ஆண்டுகளுக்குரிய காப்புறுதித் தொகையில் 7 வீத தவணை கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய முதலாம் ஆண்டுக்காக 510,000 ரூபாவும், இரண்டாம் ஆண்டுக்காக 660,000 ரூபாவும் மற்றும் மூன்றாம் ஆண்டுக்காக 840,000 ரூபாவும் காப்புறுதித் தொகையாக வழங்கப்படவுள்ளது.

கோப்பி பயிர்ச்செய்கையின் போது விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, காட்டு யானைகளின் தாக்குதல், ஏனைய வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள் மற்றும் பூச்சித் தாக்கங்கள் போன்ற பாதிப்புகளுக்கு இந்த அடிப்படைக் காப்புறுதி மூலம் இழப்பீடு வழங்கப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, தங்களின் பயிர்ச்செய்கைக்குக் காப்புறுதி செய்துள்ள தொகையிலிருந்து 0.5 சதவீதம் கூடுதல் தவணை தொகையைச் செலுத்துவதன் மூலம், திடீர் தீ விபத்துகள் மற்றும் மண்சரிவு போன்ற ஆபத்துகளுக்கான மேலதிக காப்புறுதிப் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வதற்குக் கோப்பி விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் ஊடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes