General10 June 2026

பாரதிராஜாவின் வரலாற்றுச் சம்பவம் : இலங்கைத் தமிழர் விவகாரத்திற்காக பத்மஸ்ரீ விருதைத் துறந்த இயக்குநர் இமயம்!

மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் கடந்த காலத்தில் எடுத்த துணிச்சலான முடிவு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட மனிதாபிமான நெருக்கடி உலகளவில் கவனம் பெற்றிருந்தது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தனது குரலை வலுவாக பதிவு செய்தார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது, பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தமிழர் பிரச்சினையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடையாளமாக அந்த விருதை மீண்டும் அரசுக்கே ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

பாரதிராஜாவின் இந்த அறிவிப்பு அக்காலத்தில் திரையுலகிலும் அரசியல் தரப்புக்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவரது உறுதியான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாரதிராஜாவின் மறைவையொட்டி அவரது கலைப் பயணம் மட்டுமின்றி, சமூக நீதி மற்றும் தமிழர் உரிமைகள் தொடர்பாக அவர் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளும் மீண்டும் நினைவுகூரப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாக மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்ட கலைஞராகவும் பாரதிராஜா என்றும் நினைவில் நிற்பார்.
Related recommendation
Hiru TV News | Programmes