General10 June 2026

கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத சுரேஷ் சலே!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்ட நாள் முதல், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி துவான் சுரேஷ் சலே விசாரணைகளுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதுடன் உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டதாவது:

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியாளர் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், கடந்த ஜூன் 3 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், சந்தேக நபரான சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவும் நீடிக்கப்பட்டது.

இந்தச் சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரே, சுரேஷ் சலே அதுவரை விசாரணைக்கு ஒத்துழைத்த முறையை முழுமையாக மாற்றி, அதற்குப் முட்டுக்கட்டை போடும் வகையில் ஜூன் 5 ஆம் திகதி இரவு முதல் திட்டமிட்டபடி உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.தனது உறவினர்கள் கொண்டு வந்த உணவுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

உணவுத்தவிர்ப்பு காரணமாக அவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததைத் தொடர்ந்து,காவல்துறை மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் ஜூன் 7 ஆம் திகதி பலத்த பாதுகாப்புடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் 42 ஆவது வார்டில் மனநல மருத்துவர்கள் , உடலியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட போது சுரேஷ் சலேயிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன ரக ஆப்பிள் கைத்தொலைபேசி மற்றும் அவரது வீட்டில் சோதனையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட மடிக்கணினி ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கோ, அவற்றின் கடவுச்சொற்களை வழங்குவதற்கோ அவர் இதுவரையில் மறுப்பு தெரிவித்து, உண்மைகளை மறைக்க முற்பட்டுள்ளார்.

எனினும், ஏனைய அறிவியல் மற்றும் தொலைபேசி சான்றுகளின் மூலம் இந்தச் சதித்திட்டத்துடனும், அதன் முன்தயாரிப்புகளுடனும் அவருக்கு உள்ள தொடர்பு மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கோ அல்லது அழுத்தங்களுக்கோ அஞ்சி இந்த விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 278 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்து, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்தச் சதித்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தப்பியோட முடியாதபடி நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்" என அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு சிறைச்சாலைக்குள் அதிசொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது எனவும், அவர்கள் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அஞ்சி அரசாங்கம் விசாரணைகளைக் கைவிடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில், நாட்டின் சில வங்குரோத்து அரசியல் கட்சிகள், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக உணவுத்தவிர்ப்பில் இருந்து, இந்த விவகாரத்தை அரசியலாக்கி பொதுமக்களை திசைதிருப்ப முயல்கின்றன."

கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சர்ச்சைக்கரிய மற்றும் மர்மமான மரணங்கள் குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய உணவுத்தவிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் உள்ள அச்சம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

"இவ்வாறான எந்தவொரு பதற்ற நிலைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் பணியாது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகள் மட்டுமன்றி, இந்த நாட்டின் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்தமை, கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் கடத்தப்பட்டமை உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன."

இந்த அனைத்து விசாரணைகளும் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, மிக உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர், குற்றவாளிகள் அனைவரும் தப்பியோட முடியாதபடி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes