International15 June 2026

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : 100 நாட்களுக்குப் பின் அமைதி ஒப்பந்தம்!

100 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் அமெரிக்கா – ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் இணங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 15ஆம் திகதி இரவு முதல் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்படுவதுடன், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்வு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

*
60 நாட்களுக்குள் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான இறுதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.

*
முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

*
ஈரானைச் சூழவுள்ள பகுதிகளில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகள் முக்கிய மத்தியஸ்த பங்கை வகித்ததாக தெரிவிக்கப்படுவதுடன், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் இதை "மத்திய கிழக்கிற்கான புதிய சகாப்தம்" என வர்ணித்துள்ளார்.

எனினும், ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால், அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes