General16 June 2026

டிட்வாவினால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட திட்டம்: 200 டொலருக்கு அமைச்சரவை அனுமதி!


கடந்த ஆண்டு இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' அதிதீவிர சூறாவளியினால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் மறுசீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் வீசிய டிட்வா சூறாவளி காரணமாக நெடுஞ்சாலைகள், தொடருந்து மார்க்கங்கள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் உள்ளிட்ட தேசிய உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வீடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

அனர்த்தத்துக்குப் பின்னரான பாரிய தேவை மதிப்பீட்டின்படி, இந்த சூறாவளி காரணமாக சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துச் சேதங்களும், 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒட்டுமொத்த மறுசீரமைப்பு மற்றும் மீள்வடிவமைப்புப் பணிகளுக்கு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கையின் அவசர மறுசீரமைப்புத் தேவைகளைக் கருத்திற் கொண்டும், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கியும் 'டிட்வா சூறாவளிக்கு பின்னரான மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டம்' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட திட்டமானது மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி புயலினால் முற்றாக அழிவடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல், சேதமடைந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மறுசீரமைத்தல் அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாடு மற்றும் வீடமைப்புக்கான நிதி மானியங்களை வழங்குதல் ஆகிய மூன்று கூறுகள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

இதற்கமைய, இந்த திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிரந்தர பொது மூலதன வளங்களில் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், சலுகை அடிப்படையிலான பொது மூலதன வளங்களில் இருந்து மற்றொரு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் உள்ளடக்கியதாக, மொத்தமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அவசரக் கூட்டுத் தீர்மானத்துக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes