General17 June 2026

எல்- நினோ காலநிலை நிலைமையை எதிர்கொள்ள முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் கூறுகிறது.

எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள எல்- நினோ காலநிலை நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எல்-நினோ நிலைமையால் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் நீர்வள முகாமைத்துவம் உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக ஜனாதிபதியின் தலைமையில் பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களும் தங்களது அமைச்சு மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் வெளியிட்டுள்ள முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் அடுத்த ஆண்டிலும் உருவாகக்கூடிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அடுத்த பயிர்ச் செய்கைக் காலத்தில் இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் விரிவான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிப்புகளை குறைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதே, அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes