General24 June 2026

கொழும்பில் புதிய 'மெட்ரோ பேருந்து' சேவை; யாருக்காக தெரியுமா? - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்!

கொழும்பு நகருக்குள் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் 'மெட்ரோ பேருந்து ' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார் .

இலங்கை போக்குவரத்துச் சபையின் கீழ் ஒரு புதிய மாதிரியாக இந்த 'அர்பன் லக்சரி' (Urban Luxury) மெட்ரோ பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தினமும் தங்களது சொந்த சிற்றுந்துகள் அல்லது உந்துருளிகளில் கொழும்பு நகருக்குள் வேலை நிமித்தமாகவும் இதர தேவைகளுக்காகவும் வருகை தரும் நபர்களையே இந்த பேருந்து சேவை பிரதானமாக இலக்கு வைக்கிறது.

நகருக்கு வெளியே உள்ள குறிப்பிட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த மெட்ரோ பேருந்துகள் மூலம் கொழும்புக்குள் பயணிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சாதாரண பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. இதற்கென முற்றிலும் புதிய பிரத்தியேக வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனால் தற்போதைய சாதாரண பேருந்து சேவைகளுக்கு எவ்வித பாதிப்போ அல்லது பேருந்து பற்றாக்குறையோ ஏற்படாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவொரு உயர் ரக சொகுசு பேருந்து சேவை என்பதால், இதற்கான பயணக் கட்டணம் சாதாரண பேருந்து கட்டணங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes