General27 June 2026

தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகரிக்கும் தொற்றா நோய்கள்- எச்சரிக்கும் சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்!

தற்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் வேலைத்தளங்களில் அமர்ந்து வேலை செய்யும் நேரம் அதிகரித்துள்ளதால், மக்களின் உடற்பயிற்சி செய்யும் நேரம் பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும், சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று உடற்பயிற்சியும் இன்றியமையாதது ஆகும்.

நாளொன்றுக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடத்தல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் விளையாடும் நேரம் மற்றும் விளையாட்டிற்கான முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டது. அவர்கள் தினமும் சில மணித்தியாலங்களாவது விளையாட வேண்டும்.

உணவு அருந்தாமல் இருந்தால் உடல் பருமன் குறைந்துவிடும் என்று இன்றைய இளைஞர்கள் தவறாக எண்ணுகின்றனர். குறிப்பாக பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். காலை உணவின் மூலமாகவே உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் ஆரம்பிக்கின்றது.

வளர்ந்த ஒருவருக்கு உடல் ஆரோக்கியமாக இயங்க நாளொன்றுக்கு 2500 - 3000 கலோரி (Calories) ஆற்றல் தேவைப்படுகிறது. உணவைத் தவிர்ப்பதால் கலோரி அளவு குறைந்தால் அது உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

இளைஞர்களிடையே தற்போது காஸ்ட்ரைடிஸ் (Gastritis - குடல் புண்), உடல் சோர்வு மற்றும் இரத்த சோகை (Anemia) போன்ற பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு முறையற்ற உணவுத் தவிர்ப்பு, தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற துரித உணவுகளை (Fast foods) உட்கொள்வதே முக்கிய காரணங்களாகும். மேலும், பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்ப்பது குறைந்துள்ளதும் நோய்கள் அதிகரிக்கக் காரணமாகிறது.

நம் உடல் ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பதற்கே பழகியுள்ளது. எனவே, பின்வரும் நேர ஒழுங்கைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்:

காலை உணவு: முற்பகல் 9.00 மணிக்கு முன்னதாக உட்கொள்ள வேண்டும். (கடலை, பயறு, கௌபி, இடியப்பம் அல்லது சோறு போன்ற பாரம்பரிய உணவுகள் காலை வேளைக்குச் சிறந்தவை).

மதிய உணவு: பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணிக்குள் உட்கொள்ள வேண்டும்.

இரவு உணவு: இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் உண்ண வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது, மதிய உணவை பிந்தி உண்பது மற்றும் இரவு உணவை 10.00 - 10.30 மணிக்கு மேல் தாமதமாக உட்கொள்வது முற்றிலும் தவறான பழக்கவழக்கங்களாகும். உறங்கச் செல்வதற்கு குறைந்தது 2 மணித்தியாலங்களுக்கு முன்னதாக இரவு உணவை அருந்த வேண்டும். அதேபோல், இரவு 10.30 - 11.00 மணிக்கு முன்னதாக உறங்கச் செல்வதே ஆரோக்கியமான தூக்கமாகும்.

மூன்று வேளை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால், அதற்குப் பழவகைகள் மற்றும் சீனி சேர்க்காத பானங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பர்கர் (Burger), பனிஸ் (Bun) போன்றவற்றை இடை உணவாக உட்கொள்வதனாலேயே உடல் எடை அதிகரிக்கின்றது.

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் இருக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இது பாடசாலைகளில் மாணவர்களிடையே பாகுபாடற்ற தன்மையை உருவாக்கும்.

மதிய உணவின் போது அதிக அளவு சோறு உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு மதிய உணவுத் தட்டில்:

கால்வாசி (25%) பகுதி மட்டுமே சோறு இருக்க வேண்டும்.

எஞ்சிய பகுதியில் புரதம் (Protein), மரக்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்கள் சம அளவில் அடங்கியிருக்க வேண்டும்.

இரவு வேளையில் இடியப்பம், பிட்டு, இட்லி அல்லது சோறு சாப்பிடுவதாக இருந்தால் அதன் அளவை பெருமளவு குறைக்க வேண்டும்.

இடைவேளைகளில் சீனி அற்ற தேநீர் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது உடலுக்கு உகந்தது என சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes