General27 June 2026

நாட்டில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: பொதுமக்களுக்கு சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம் அவசர எச்சரிக்கை!

நாட்டில் டெங்கு நோய்த் தொற்று மற்றும் பரவல் அபாயம் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும், சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் எச்சரித்துள்ளார்.

'சூரியனின் விழுதுகள்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஈடிஸ் வகை நுளம்புகள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே முட்டையிடுகின்றன. இந்த முட்டைகள் 7 முதல் 10 நாட்களுக்குள் முழுமையான நுளம்புகளாக மாறிவிடுகின்றன.

பிள்ளைகளின் விளையாட்டு உபகரணங்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சொப்பின் பைகள் மற்றும் கூரைகளின் பீலிகளில் தேங்கும் நீர் நீரின் காரணமாக நுளம்புகள் அதிகம் பெருகுகின்றன.

குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம், நீர் சுத்திகரிப்பான்கள் (Water Filters) மற்றும் பூச்செடிகளுக்குள் தேங்கும் தண்ணீரின் காரணமாகவும் நுளம்பு அதிகம் பரவுகின்றது.

இந்த நுளம்புகள் பொதுவாக காலை மற்றும் மாலை வேளைகளிலேயே அதிகம் கடிக்கின்றன. இரத்த வகைகளுக்கும் நுளம்பு கடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

டெங்கு என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். ஆரம்பத்தில் இது சாதாரண காய்ச்சல் போலவே தென்படும்.

இந்த வைரஸ் உடலுக்குள் சென்று குருதிச் சிறுதட்டுகளை அழிக்கும். இதனால் தான் காய்ச்சல் ஏற்பட்டு 3 நாட்களின் பின்னர் இரத்தப் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

சாதாரண காய்ச்சல் 3 நாட்களுக்குள் குணமாகும். ஆனால், 3 நாட்களுக்குப் பின்னரும் தீவிர உடல் சோர்வு, கடுமையான வயிற்று வலி, தலைவலி என்பன நீடித்தால் அது டெங்கின் ஆபத்தான கட்டமாகும்.

குருதிச் சிறுதட்டுகள் குறைவடையும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து, சோர்வு மற்றும் உட்புற இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எக்காரணம் கொண்டும் வலி நிவாரண மாத்திரைகளை (Painkillers) உட்கொள்ள கூடாது.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உடல் வலியைத் தவிர்க்க மருந்தகங்களில் சுயவிருப்பத்தின் பேரில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது மரணம் வரை கொண்டு செல்லலாம்.

இந்த மாத்திரைகள் குருதிச் சிறுதட்டுகளை மிக வேகமாக அழித்துவிடும். காய்ச்சலுக்கு பனடோல்/பாராசிட்டமோல் (Paracetamol) தவிர வேறு எந்த மருந்தையும் மருத்துவர் ஆலோசனையின்றி எடுக்கக் கூடாது.

தரமான மற்றும் முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள பொது மருத்துவமனைகளை நாடுவதே சிறந்த வழிமுறையாகும்.
டெங்கு நோயாளிகளுக்கு நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

வீட்டில் இருக்கும்போது சுகாதாரமான, எளிதில் சீரணிக்கக்கூடிய உணவுகள், பழச்சாறுகள், சூப் மற்றும் திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

டெங்கு தொற்றிய பாடசாலை மாணவர்கள் 7-8 நாட்களும், பெரியவர்கள் ஒரு வார காலமும் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும்.

டெங்கில் 4 வகையான வைரஸ்கள் உள்ளன. எனவே, ஒருமுறை டெங்கு வந்தவருக்கு மீண்டும் வரலாம். அவ்வாறு இரண்டாவது முறை வரும்போது பாதிப்புகள் மிகத் தீவிரமாக இருக்கும்.

தற்போது பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள்அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விசேட சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் 7,000 ஆக இருந்த நோயாளர் எண்ணிக்கை தற்போது 15,000 ஐத் தாண்டியுள்ளதுடன், பருவப்பெயர்ச்சி மழை குறையும் போதே டெங்கு குறையும் என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்குவிற்கு மேலதிகமாக, தற்போது பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் தலைவலி, தொண்டை வலி மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் கூடிய சுவாச வைரஸ் நோய் ஒன்றும் பரவி வருகின்றது.

இதனைத் தவிர்க்க முகக்கவசம் (Mask) அணிவதுடன், முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Related recommendation
Hiru TV News | Programmes