General30 June 2026

15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பா? அதிரடி முடிவுக்குத் தயாராகும் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரில், 15 வயதான அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட பலவீனங்கள் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பதற்கான கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவர் மற்ற வீரர்களைப் போல தகுந்த செயல்முறைகளைப் பின்பற்றி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என உதவி பயிற்சியாளர் ரையன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த 15 வயது இளம் வீரர் சர்வதேச சவால்களுக்குத் தயாராகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என முழுமையாக இழந்த அதிர்ச்சியில் இருக்கும் இந்திய அணி நிர்வாகம், கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் அயர்லாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு, சூர்யவன்ஷியை அபிஷேக் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அயர்லாந்து தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் திணறினர்.

அத்துடன் IPL போன்ற தட்டையான ஆடுகளங்களில் ஆடுவதை விடுத்து, இங்கிலாந்தின் சவாலான சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஜொஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், சகிப் மஹ்மூத் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்களையும், ஆதில் ரஷித் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களையும் இங்கிலாந்து கொண்டுள்ளது.

ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், பில் சால்ட், வில் ஜேக்ஸ் போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.

புதிய T20 அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வந்து, இங்கிலாந்தின் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Related recommendation
Hiru TV News | Programmes