General01 July 2026

பதுளை அலுகொல்ல காட்டுத் தீ : இராணுவ ஆயுதக் களஞ்சியத்திற்கு ஆபத்து

பதுளை, அலுகொல்ல காப்புக்காடு பகுதியில் இன்று (1) பிற்பகல் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி இதுவரை சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் காற்று மற்றும் பிரதேசத்தின் செங்குத்தான மலைப்பாங்கான நிலஅமைப்பு காரணமாக, தீ பரவியுள்ள பகுதிக்குச் செல்வதில் மீட்புக் குழுவினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தீ பரவியுள்ள இந்தப் பகுதிக்கு அருகில் அரசாங்கத்தின் முக்கிய வெடிபொருள் களஞ்சியசாலை (Ammunition Depot) ஒன்று அமைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தீ மேலும் பரவினால் பாரிய ஆபத்து அல்லது பேரழிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பின்வரும் துறையினர் இணைந்து கூட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

பதுளை காவல்துறை

எலதலுவ இராணுவ முகாம் படையினர்

பதுளை மாநகர சபை தீயணைப்புப் படை

வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்

இந்தப் பகுதியில் நிலவும் கடுமையான வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகவே தீ வேகமாகப் பரவியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், எவரேனும் திட்டமிட்டு இந்தத் தீயை வைத்தனரா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes