General02 July 2026

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டு - காலி மாநகர சபையின் அதிகாரிகள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட காலி மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் மற்றும் களப்பணியாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தனியார் விற்பனை நிலையம் ஒன்றிற்குச் சொந்தமான விளம்பரப் பலகையை காட்சிப்படுத்துவதற்காக மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய வரி தொடர்பான ஆவணங்களை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேகநபர்கள் 5,000 ரூபாய் கையூட்டல் கோரியுள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர், காலி நீதவான் முன்னிலையில் தாமாக முன்வந்து வாக்குமூலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரிய போதிலும், நீதவான் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes