General03 July 2026

கொக்குத்தொடுவாய் உப்பள விவகாரம் - மாவட்ட அரசாங்க அதிபரிடம் விளக்கம் கோரல்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று - கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விளக்கம் கோரியுள்ளார்.

அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் உத்தியோகபூர்வ கடிதமொன்று, மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி, வவுனியா மாவட்டச் செயலகத்தில் விவசாய மற்றும் காணி அமைச்சரின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன்போது, கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத உப்பள நிர்மானம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணும் பொறுப்பு முல்லைத்தீவு மாவட்ட நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தில் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைக்காக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்குப் பாரப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது குறித்து எந்தவித அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகளோ அல்லது முன்னேற்ற அறிக்கைகளோ சமர்ப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நில உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் நேரடித் தலையீடு இன்றியமையாதது என்பதால், குறித்த விடயம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்த விரிவான விளக்க அறிக்கையொன்றை விரைவாக வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes