General07 July 2026

விலங்கு தீவனத்திற்கு நெல், அரிசியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

விலங்கு தீவன தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 3ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலின் (கட்டளை இலக்கம் 97) மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், விலங்கு தீவன தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியை விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, கொண்டு செல்வது அல்லது வாங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அந்த 2022ஆம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விலங்கு தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes