International07 July 2026

மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்

சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இன்று இடம்பெற்ற இரட்டை வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி மெக்ரோனின் வாகனப் பேரணி விடுதியை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் இடம்பெற்ற போதிலும், பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றதால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சிரியாவின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

சுற்றுலா அமைச்சுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த இரு குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்ய முற்பட்ட போதே அவை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது குண்டு வெடித்த பின், அங்கு மீட்புப் பணிக்காக நின்ற நோயாளர் காவு அருகே இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.

சிரியாவில் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஒருவர் அங்கு செல்லும் முதல் விஜயம் இதுவாகும்.

கடந்த வாரமும் தமஸ்குஸில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற நிலையில், இன்றைய தாக்குதல் புதிய அரசாங்கத்துக்கு பெரும் பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes