General09 July 2026

ஈரான் மீது அமெரிக்கா மற்றுமொரு கட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு ஈரானின் கடற்கரை பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளை மையம், அண்மைக்காலமாக ஈரானால் முன்னெடுக்கப்பட்ட 'நியாயமற்ற ஆக்கிரமிப்பு' நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டைப் பொறுப்புக்கூற வைக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

"முக்கிய சர்வதேச கடல்வழிப் பாதையில் சுதந்திரமாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக, அந்த நாட்டை அமெரிக்கா பொறுப்புக்கூற வைக்கிறது" என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிடாவிடில் எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி அந்த நாட்டை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவோம் என ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தமையும், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவமே, தற்போதைய இந்த தாக்குதலுக்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes