General14 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 200 பேரிடம் வாக்குமூலம்- ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட விசாரணைக்குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கைதிகள், சிறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழுவும், 7 தனித்துவமான விசேட விசாரணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களால் சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் DVR இயந்திரங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சிறைசாலை அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் உள்ளக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கியவர்களை கண்டறிந்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes