General14 July 2026

பரீட்சை வினாத்தாள் கசிவு - 17நாளாக தொடரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இந்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் புது டெல்லியில் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று 17வது நாளை எட்டியுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,கொக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

2026 ஜூன் 28ஆம் திகதியன்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் வாங்சுக் கடும் உடல் சோர்வடைந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அவர் தனது உடல் எடையில் 8.5 கிலோவை இழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக, 30 வயதான அபிஜீத் திப்கே என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கொக்ரோச் என்ற இளைஞர் அமைப்பு, சமூக ஊடகங்கள் மூலம் குறுகிய காலத்தில் 22 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது.

இது இளைஞர்களின் வேலையின்மை மற்றும் பரீட்சை முறைகேடுகள் மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில் ஜூலை 20ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை வினாத்தாள் கசிவு காரணமாக மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு பின்னர் நடத்தப்பட்டன.

இது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சகமோ அல்லது அரச தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.

இதேவேளை இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம், ,இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் ஒரு எதிர்பார்க்காத எதிர்ப்பாகக் கருதப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes