General18 July 2026

செம்மணியில் தொடரும் அகழ்வு: 36ஆவது நாளில் 6 புதிய என்புக்கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆவது நாளான இன்று, மேலும் 6 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

இதில் சிறார் ஒருவரின் என்புக்கூடும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் 56 நாட்கள் அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 36 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இன்றைய தின நிலவரப்படி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், மூன்று மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அகழ்வின் போது என்புக்கூடுகளுடன் வெள்ளை நிறப் பாசிமணி, இரும்புத்துண்டு மற்றும் வளையல் போன்ற சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தனித்துவமான முறையில் அமைந்த ஒரு மண்டையோடு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனைச் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மணி புதைகுழியில் இதுவரையில் மூன்று கட்டங்களாக மொத்தம் 90 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இதுவரை 437 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளதுடன், அதில் 428 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes