General26 July 2026

ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல: நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு எந்தவித சவாலும் இல்லை எனச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகடி பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் இருவரும் ஒன்றாகச் செயற்பட்ட காலத்திலும் சாதனைகளைச் செய்ய முடியாமல் பிரிந்து சென்றதாகவும், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதனையும் சாதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சமமான கூட்டிணைவாகக் கருத முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், ரணில் விக்ரமசிங்க தன்னை மீண்டும் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளவும், சஜித் பிரேமதாசவைத் தனக்குக் கீழ் செயற்படும் ஒருவராக மாற்றவுமே இந்தச் சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், சந்திப்புகளின்போது ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்குவதும், சஜித் பிரேமதாச அவற்றை குறிப்பெடுத்துக்கொள்வது போன்ற தோற்றமே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தவர்களில் பலர் வழக்குகள், விசாரணைகள் அல்லது குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் நோக்கிலும் அச்சத்தின் காரணமாகவுமே சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes