General26 July 2026

64 வெளிநாட்டுப் புறாக்கள் கடத்தல் - கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருவர் கைது!

இத்தாலியிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 3,431,400 ரூபாய் பெறுமதியான 64 வெளிநாட்டுப் புறாக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தப் புறாக்கள், டுபாய் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட 64 புறாக்களில் 8 புறாக்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

சிறிய இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களின் 8 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இவை கடத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என்பதோடு செல்லப்பிராணி விற்பனையக உரிமையாளர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட புறாக்களை மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புவதற்காக எமிரேட்ஸ் வானூர்தி சேவையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes