General28 July 2026

இலங்கைக் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்: புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறுசீரமைப்புக் குழு, நாட்டின் கிரிக்கெட் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன்படி பாடசாலை மட்டம் முதல் முதல்தர கிரிக்கெட் வரை நடுவர் செயற்பாட்டை மேம்படுத்த 2 நடுவர் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சர்வதேச மைதானங்களில் ஆடுகளம் தயாரிப்பதைக் கண்காணிக்கவும், தேவைப்படும் இடங்களில் கழக மற்றும் பாடசாலை மைதானங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் க்யூரேட்டர் மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தேசிய உயர் செயல்திறன் கட்டமைப்பு முதல் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்கள் வரை பயிற்றுவிப்புத் தரத்தை சீரமைக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஆஷ்லே ரோஸை இலங்கைக்கு அழைத்து வந்து இரண்டு ஆண்டு பயிற்றுவிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உடற்தகுதி நிபுணர் அலெக்ஸ் கவுண்டூரிஸ் (Alex Kountouris), இலங்கை அணியின் இயன்முறை மருத்துவர் மற்றும் உடற்தகுதிப் பிரிவுகளை மறுசீரமைக்க உதவவுள்ளார்.

பாடசாலை கிரிக்கெட்டிலிருந்து மூத்தோர் கிரிக்கெட்டுக்குச் செல்லும் திறமையான வீரர்களுக்கு சிறப்பாக ஆதரவளிக்கும் வகையில், தற்போதைய 23 வயதுக்குட்பட்டோர் தொடருக்குப் பதிலாக 21 வயதுக்குட்பட்டோர் போட்டியை அறிமுகப்படுத்துவது குறித்து குழு பரிசீலித்து வருகின்றது.

பாடசாலை படிப்பை முடித்த பிறகு 17 முதல் 22 வயதுக்குள் பல திறமையான வீரர்கள் இழக்கப்படுவதாகவும், 21 வயதுக்குட்பட்டோர் போட்டி இலங்கைக் கிரிக்கெட் எதிர்கால தேசிய வீரர்களை நன்றாக அடையாளம் கண்டு வளர்க்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் வீரர்களின் நல்வாழ்வு, மேலாண்மை கட்டமைப்புகள் மற்றும் நீண்ட கால வீரர்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதன் கவனத்தை விரிவுபடுத்தி வருவதாகவும் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது.

கூடுதலாக, வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க புதிய வீரர் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes