General02 August 2026

சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் - நாமல் குற்றச்சாட்டு!

நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சிறைச்சாலை மோதல் இதுவென சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல என்றும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.

சிறைச்சாலைத் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையிலும், இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பை அதிகரிப்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும் எனத் தெரிவித்துள்ள அவர், அதிகளவிலான கைதிகள், போதிய வசதியின்மை, சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் புனர்வாழ்வு திட்டமின்மை ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சிறைத்தண்டனை ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிக்கிறதே தவிர, அவர்களின் கண்ணியத்தை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச, தற்காலிக நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பைச் சீரமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.


Related recommendation
Hiru TV News | Programmes