General04 August 2026

அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு குறித்து பெற்றோர் அதிருப்தி

அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் பெண் உருவம் இடம்பெற்றிருந்ததாகக் கூறி சில பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்கவும் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலப் பகுதிகளிலுள்ள தர்மப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் பிரதம செயலாளர் குண்வத்துவே குசலதம்ம தேரர் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, இசைக் கருவி வாசிக்கும் பெண் உருவம் இடம்பெற்ற அந்த நினைவுப் பரிசு, நாடகம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது அந்தப் போட்டிகளின் கருப்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நினைவுப் பரிசின் உண்மையான நோக்கத்தை பெற்றோர் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes