General05 August 2026

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் - காவல்துறை மா அதிபருக்கு நாமல் எச்சரிக்கை!

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர், கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட காவல்துறை மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் காவல் துறைக்கு அரசாங்கம் வரம்பற்ற வளங்களை வழங்கி வரும் நிலையில், அரசியல்வாதிகள் போடும் கயிறுகளைப் பிடித்துக்கொண்டு காவல்துறை மா அதிபர் நிர்கதியாகக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சித்த அவர், நிவாரணங்கள் வழங்கப்படுவதாக அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினாலும், உரம் தட்டுப்பாடு மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை கிடைக்காததால் விவசாயிகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அண்மையில் இடம்பெற்ற சைபர் மோசடி குறித்துக் கவலை வெளியிட்ட அவர், அரசாங்க நிறுவனங்களைப் பலப்படுத்துவது குறித்துப் பேசப்பட்டாலும், ஊடுருவல்காரர்கள் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் செல்வதாகக் குற்றம் சாட்டினார்.

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையின் போது பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் மீட்புப் பணிகளைப் பாராட்டிய அவர், கடந்த கால அனர்த்தங்களின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, டிட்வா சூறாவளியின் பின்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அங்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் தற்போதைய அனர்த்தத்தினால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அனர்த்த நிலைமையினால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கூடுதல் அழுத்தங்களை எதிர்கொள்வதால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்றும், விவசாயிகளின் உரத் தட்டுப்பாடு மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes