General06 August 2026

தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் நிலவும் கடும் கொந்தளிப்பான வானிலை காரணமாக, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட கடுமையான வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகள் தற்போது பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள கடற்றொழில் திணைக்களம், மறு அறிவித்தல் வரை அந்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து புறப்படும் கடற்றொழில் படகுகளும் இந்த அபாயகரமான கடற்பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உயிர் மற்றும் சொத்து இழப்புகளைத் தடுக்கும் வகையில், அனைத்து கடற்றொழில் சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes