General11 August 2026

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு - அவசர நிலை பிரகடனம்

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.

கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு கொலம்பியா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

கொலம்பியாவின் கோபி உற்பத்தி பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரெய்ரா (Pereira) நகரத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுற்றியுள்ள நகரங்களும், 'வேலே டெல் கௌகா' (Valle del Cauca) பிராந்தியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் போகொடாவில் (Bogotá) மரங்கள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் கடுமையாக அசைந்ததுடன், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் உள்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான வெனிசுவேலா, ஈக்வடோர் மற்றும் பனாமா வரை உணரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் 'தேசிய அனர்த்த நிலைமையை' பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் பாதீடுகளை மாற்றி அமைப்பதற்கும் அவருக்கு விசேட அதிகாரங்கள் கிடைக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், சில நாட்களிலேயே இந்த பெரும் பேரிடரை எதிர்கொண்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes