General11 August 2026

முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்: அமைச்சரவை அனுமதி

முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி, 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு 2025 ஜூன் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சுற்றாடல், சட்டம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ,அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வலுசக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒப்பந்தத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இன்றி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் முத்துராஜவெல முனையத்தின் எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes