International13 August 2026

ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!

சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ மூலம், ரூ.67,452 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி, மின்னணுவியல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் கஸகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யாவின் Sberbank உள்ளிட்ட அமைப்புகளுடன் 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் Bosch நிறுவனத்துடன் TIDCO ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மேலும், Walmart நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 9 மாவட்டங்களில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் ‘Idea to Impact Foundation’ உடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,21,788 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தமிநாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.4,476 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ரூ.2,676 கோடி மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.777.74 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வின் நிறைவாக, 9 முன்னணி நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes