General17 August 2026

பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!

தற்போது சிறுவர்களிடையே பட்டம் விடுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளதால், அது தொடர்பான விபத்துகளும் அதிகளவில் பதிவாகி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எனவே, பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்தவமனையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டம் விடுவது ஒரு மகிழ்ச்சியான நடவடிக்கையாக இருந்தாலும், கவனக்குறைவாகவும் பாதுகாப்பு முறைகளை மீறியும் செயல்படுவதால் சிறுவர்கள் உட்பட ஏனையோருக்கு கடுமையான பாதிப்புகளும், சில சந்தர்ப்பங்களில் உயிராபத்தும் ஏற்படக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழுக்களாகப் பட்டம் விடும் போது ஏற்படும் மோதல்கள், வீழ்ச்சிகள் மற்றும் கட்டடங்கள் அல்லது உயர்ந்த இடங்களில் இருந்து பட்டம் விட முயலும் போது கீழே விழுவதால் பலத்த காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பட்டம் விடப் பயன்படுத்தப்படும் நூல்கள் அதிஉயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்குவதால், நூல் வழியே மின்சாரம் பாய்ந்து மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மின்சாரத் தாக்குதலால் ஏற்படும் தீக்காயங்கள் காரணமாக கை, தோள்பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கடுமையாக சேதமடையக்கூடும்.

இவ்வாறு சேதமடைந்த பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதால், அறுவை சிகிச்சை மூலம் அப்பகுதிகளை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படுவதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, அதிஉயர் மின்னழுத்த கம்பிகளுடன் மின்சாரத்தைக் கடத்தும் தன்மையுள்ள நூல்கள் சிக்குவதனால் உடனடி உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, அதிஉயர் மின்னழுத்த கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தடுப்பதற்கு பெற்றோர்களும் பெரியவர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர்களின் பொழுதுபோக்கைப் போலவே அவர்களின் உயிர்ப்பாதுகாப்பும் முக்கியமானது என்பதால், பட்டம் விடுவதால் ஏற்படக்கூடிய இத்தகைய ஆபத்தான விபத்துகளைத் தவிர்க்க பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் முழுச் சமூகமும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பதில் பணிப்பாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes