Sports19 August 2026

இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே காலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்று அபார வெற்றி பெற்றது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர் மானவ் சுதரின் பந்துவீச்சில் தடுமாறியது.

இருப்பினும் சொனால் தினுஷ சதம் கடந்ததுடன் நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் இலங்கை அணி 284 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் இந்தியா 178 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது சிக்ஸரைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்தார்.

இந்தநிலையில் இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்று தோல்வியை தழுவியது.

மானவ் சுதர் 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதற்கமைய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes