General20 August 2026

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்தச் சம்பவத்தை அனைவரும் மிகவும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிடப்படும் அறிக்கைகளையோ நடத்தைகளையோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

"பல இன மக்கள் வாழும், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும், சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் நாடு இது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

எனவே, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடான இலங்கையில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உடைகள், உணவுகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. இவை அனைத்தின் சேர்க்கையும், ஒத்திசைவும், ஒற்றுமையும்தான் இலங்கை அரசாக நிலவுகிறது.

இருப்பினும், இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இனவாதப் பூச்சைப் பூசி ஆட்சி செய்தவர்களின் துரதிர்ஷ்டவசமான அனுபவங்கள் உள்ளன.

ஆனால், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும்கூட அதிகாரத்திற்கு வர இனவாதத்தைப் பயன்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து சுமார் 11 மாதங்கள் ஆகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள இனவாதத்திற்கும் மத மோதல்களுக்கும் மீண்டும் இடமளிக்கவில்லை.

இத்தகைய சிறிய சம்பவங்கள் நேர்ந்தாலும், தேவைப்பட்டால் சட்டத்தின் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும், கலந்துரையாடல்கள் மூலமாகவும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, கல்முனை மருத்துவமனை விடயம், தேவையில்லாத மோதல் நிலையாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும், சிறிய இனவாத குழுக்களுக்குப் பந்தடிக்கும் வாய்ப்பாக இது மாறக்கூடாது என்பதிலும் அனைவரும் கவனமாக நடந்துகொண்டனர்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச சேவையில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களும், ஆடை நடைமுறை அல்லது ஒழுங்குமுறை பின்பற்றப்படும் ஊழியர்களும் உள்ளனர்.

சுகாதாரத் துறையைக் கருத்தில் கொள்ளும்போது:

நோயாளிகளும் பொதுமக்களும் ஊழியர்களை எளிதாக அடையாளம் காண்பதற்காக,

மருத்துவமனைகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சுகாதாரத் துறையில் சீருடைகளைத் தீர்மானிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. நீண்டகாலக் கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, நோயாளி பராமரிப்பை எளிதாக்கவும் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாகச் சீருடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

சுகாதார அமைச்சில் சீருடைக்கு உரிமையுள்ள ஊழியர்களுக்குச் சீருடைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

இதன்படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல், செவிலியர்களுக்கு 30,000 ரூபாய், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு 28,000 ரூபாய், சுகாதாரப் பரிசோதகர்களுக்கு 30,000 ரூபாய் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 18,600 ரூபாய் எனச் சீருடைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளுக்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்கவும், சில குழுக்கள் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தடுக்கவும் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்த மோதல் பரவாமல் தடுக்க குறித்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

சீருடையில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அதை அமைச்சின் சீருடைக் குழுவிற்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான யோசனைகளைச் சமர்ப்பித்து, கலந்துரையாடி, சுற்றறிக்கையை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத்திலும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தற்போதைக்கு நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரம்பரிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒருவர் அரச சேவையில் இணைவது கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத, கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes